பொலன்னறுவையில் இருந்து கல்முனை நோக்கி பிரயாணிகளுடன் பயணித்த பேருந்தில் 14 வயது சிறுமி ஒருவருடன் பாலியல் சேட்டை புரிந்த புனானை இராணுவ முகாமில் கடமையாற்றி வரும் இராணுவ சிப்பாய் ஒருவரை நேற்று வியாழக்கிழமை (23) கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
இது பற்றி தெரிய வருவதாவது,
கடந்த 20 ம் திகதி பொலன்னறுவையில் இருந்து கல்முனை நோக்கி பிரயாணித்த தனியார் பேருந்தில் 14 வயது சிறுமி அவரது சிறிய தந்தையுடன் வாழைச்சேனையில் உள்ள அவரது வீட்டிற்கு செல்வதற்காக பிரயாணித்துள்ளார்.
அதேவேளை புனாணை இராணுவ முகாமில் கடமையாற்றி வரும் இராணுவ சிப்பாய் விடுமுறையில் வீடு சென்று திரும்பியவர் அதே பேருந்தில் ஏறி சிறுமிக்கு அருகில் அமர்ந்து கொண்ட நிலையில் பேருந்து மன்னம்பிட்டியை தாண்டி சென்று கொண்டிருந்த போது குறித்த இராணுவ சிப்பாய் சிறுமி மீது பாலியல் சேட்டை செய்ய முற்பட்டதையடுத்து சிறுமி அருகில் இருந்த சிறிய தந்தையிடம் முறையிட்டதையடுத்து அவர் அந்த இராணுவ சிப்பாய் மீது தாக்குதல் நடாத்தினார்.
இதனையடுத்து குறித்த பேருந்தை சாரதி வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசென்று நிறுத்தி நடந்த சம்பவத்தை தெரிவித்ததையடுத்து பொலிசார் தாக்குதலுக்கு உள்ளான இராணுவ சிப்பாயை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் தாக்குதலை மேற்கொண்ட சிறுமியின் சிறிய தந்தையை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இது தொடர்பாக விசாரணை மேற்க் கொண்டுவந்த பொலிசார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இராணுவ சிப்பாய் நோய் குணமாகி வாட்டில் இருந்து வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு வெளியேற முற்பட்டபோது அவரை கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை இன்று வெள்ளிக்கிழமை (24) நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
