வவுனியா மாவட்டத்தில் டித்வா புயல் காரணமாக சேதமடைந்த வீடுகளுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு இன்று வவுனியா மாவட்ட செயலக மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.
டித்வா புயலினால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கான நிவாரணமாக, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபா 5 இலட்சம் ரூபா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதில் முதல் கட்டமாக ரூபா 3 இலட்சம் பெறுமதியான காசோலைகள் வழங்கப்படுகின்றன.
வவுனியா மாவட்டத்தில் மொத்தமாக 669 பேருக்கு குறித்த காசோலை வழங்கப்படவுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, இன்று செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட 476 பேரில் முதற்கட்டமாக 131 பேருக்கு காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன.
செட்டிகுளம் பிரதேச செயலாளர் கே.சுலோஜினி, தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கூட்டுறவு பிரதி அமைச்சர் உப்பாலி சமரசிங்க, வவுனியா மாவட்ட செயலாளர் பி.ஏ.சரத்சந்திர, மேலதிக மாவட்ட செயலாளர் நா.கமலதாசன், செட்டிகுளம் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துக் கொண்டிருந்தனர்.
