கரடியனாறு பெரிய புல்லுமலை பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட விசேட அதிரடிப்படை கான்ஸ்டபிள் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட 4 பேரை கைது செய்த சம்பவம் தொடர்பாக மகா ஓயா விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி மற்றும் சாரதி உட்பட மேலும் இருவரை நேற்று சனிக்கிழமை (11) இரவு கைது செய்துள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர்.
செங்கலடி பதுளை வீதியில் உள்ள பெரிய புல்லுமலை பிரதான வீதியில் உயிரிழந்த ஒருவருக்கு சொந்தமான காணி ஒன்றில் சம்பவ தினமான சனிக்கிழமை அதிகாலையில் தொல்பொருட்களை தேடும் நோக்கில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் வாழைச்சேனை கடதாசி ஆலை விசேட அதிரடிப்படை முகாமில் இருந்து விசேட நடவடிக்கைக்காக மகாஓயா அதிரடிப்படை முகாமிற்கு இணைக்கப்பட்டு கடமையாற்றி வரும் கான்ஸ்டபிள்யூ மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்யூ உட்பட உறுகாமம், பெரிய புல்லுமலை பிரதேசங்களைச் சேர்ந்த 4 பேரை பொலிசார் கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்ட விசேட அதிரடிப்படை கான்ஸ்டபிள்யூ மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் அவருக்கு உதவிய விசேட நடவடிக்கைக்காக இணைக்கப்பட்டிருந்த மகா ஓயா விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி மற்றும் விசேட அதிரடிப்படை வாகன சாரதியான கான்ஸ்டபிள்யூ ஆகிய இருவரும் இந்த சட்ட விரோத செயலுக்கு உதவிய குற்றச்சாட்டில் சனிக்கிழமை இரவு 8.00 மணியளவில் கைது செய்யப்பட்டனர்
இச்சம்பவம் தொடர்பில் இதுவரை 3 விசேட அதிரடிப்படையினர், ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள்யூ, 2 பொது மக்கள் உள்ளிட்ட 6 பேரை கைது செய்துள்ளதுடன் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
