ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடங்கி இரண்டு வாரங்களுக்கும் மேலாகிவிட்ட நிலையில், வர்த்தக கப்பல்களின் இலகுவான போக்குவரத்து வசதியாக இருந்த ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கான முயற்சிகளுக்குப் பங்களிக்கத் தயாராக இருப்பதாக நட்பு நாடுகள் வெளியிட்ட அறிக்கைக்குப் பிரதமர் மார்க் கார்னி தனது ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளார்.
19ம் திகதி வியாழக்கிழமையன்று இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் வெளியிட்ட கூட்டறிக்கைக்குப் ஆதரவாகவே கனடியப் பிரதமர் மார்க் கார்னி தனது சம்மதத்தைத் தெரிவித்தார்.
“ஜலசந்தி வழியாகப் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்கான பொருத்தமான முயற்சிகளுக்குப் பங்களிக்க நாங்கள் தயாராக உள்ளோம். ஆயத்தத் திட்டமிடலில் ஈடுபட்டுள்ள நாடுகளின் அர்ப்பணிப்பை நாங்கள் வரவேற்கிறோம்,” என்றும் கனடியப் பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கனடாவின் நட்பு இதே நாடுகள் எவ்வாறு உதவ உத்தேசித்துள்ளன என்பதை அந்த அறிக்கை குறிப்பிடவில்லை. நேட்டோ கூட்டணியிடம் ஈரானின் அண்டை நாடுகள் உதவி கோரினால், தங்களைத் தற்காத்துக் கொள்ள அவர்களுக்கு உதவுவது குறித்து கனடா “பரிசீலித்து வருவதாக” பாதுகாப்பு அமைச்சர் டேவிட் மெக்கின்டி கூறியுள்ளார்.
இதேவேளை போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சாத்தியமான இராஜதந்திர வழிகள் குறித்து அடுத்த வாரம் பாரிஸில் உள்ள தனது ஜி7 அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு முன்வைக்கப் போவதாகவும் வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் வெளிநாட்டு ஊ டகங்களிற்கு தெரிவித்த நிலையில் மேற்படி அறிக்கைகள் வெளியாகியுள்ளன.
கடந்த மாதம் தனது பிரதேசத்தில் அமெரிக்க-இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதற்குப் பதிலடியாக, உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் மற்றும் எரிவாயு கடந்து செல்லும் ஹோர்முஸ் என்னும் அந்த நீர்வழிப்பாதை வழியாக ஈரான் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தியதுடன், முக்கிய எரிபொருள் கப்பல் தளங்கள் மீது குண்டுவீச்சு நடத்தியது. இதனால் உலகளாவிய எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்தன.
இந்த அறிக்கை வெளியிடப்படுவதற்குச் சற்று முன்பு நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில், அமெரிக்க- இஸ்ரேல்-ஈரான் போர் தொடங்குவதற்கு முன்பு அத தொடர்பாக கனடாவிடம் கலந்தாலோசிக்கப்படவில்லை என்றும், அதில் சேரும் எண்ணம் கனடாவிற்கு இல்லை என்றும் கனடிய பாதுகாப்பு அமைச்சர் மெக்கின்டி மீண்டும் கூறினார். எவ்வாறாயினும் கனடாவின் இராணுவத் தலையீட்டை தான் நிராகரிக்கவில்லை என்றும் அவர் 19ம் திகதி வியாழக்கிழமை ஒட்டாவா மாநகரில் பாராளுமன்ற வளாகத்தில் தெரிவித்தார்.
“மத்திய கிழக்கு மற்றும் வளைகுடாப் பகுதிகளில், ஈரானைச் சுற்றியுள்ள அண்டை நாடுகளுக்கு நேட்டோ நட்பு நாடுகளின் உதவி தேவைப்பட்டால், அதை நேட்டோ நாடுகளோடு கனடாவும் பரிசீலிக்க வாய்ப்புக்கள் உண்டு என்றும் கனடிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்..
கனடியப் பாதுகாப்பு அமைச்சர் இதுபற்றி மேலும் தெரிவிக்கையில் “இது மிகவும் ஆபத்தான ஒரு சூழ்நிலையாகும். யுத்தத்தின் அகோரமும் தணிந்த நிலையும் ஒவ்வொரு மணி நேரமும் மாறிக்கொண்டிருக்கிறது, மேலும் தெளிவான மற்றும் உறுதியான உளவுத் தகவல்களைப் பெறுவது சில நேரங்களில் கடினமாக உள்ளது, எனவே நாங்கள் இதை மிகவும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்.” என்றும் தெரிவித்தார்.
