டம்பளர் ரிட்ஜ் (Tumbler Ridge) பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு முன்பே, கொலையாளியின் ChatGPT கணக்கை முடக்கி வைத்த போதும், அது குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்காத OpenAI நிறுவனத்தின் மீது மத்திய அரசு கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக நேற்று ஒட்டாவாவில் நடைபெற்ற உயர்மட்டச் சந்திப்பு எவ்வித உருப்படியான முடிவும் இன்றி முடிவடைந்தது.
கடந்த 10-ஆம் திகதி, 18 வயது இளம்பெண் ஜெஸ்ஸி வான் ரூட்செலர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவரது தாய், சகோதரர் மற்றும் 5 பள்ளி மாணவர்கள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.
கொலையாளி கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதமே ChatGPT தளத்தில் வன்முறையான கருத்துக்களைப் பதிவிட்டதால் அவரது கணக்கு OpenAI நிறுவனத்தினால் முடக்கப்பட்டிருந்தது.
ஆனால், அந்தத் தகவலை OpenAI நிறுவனம் நாட்டின் காவல்துறைக்குத் தெரிவிக்கவில்லை.
இது குறித்து மத்திய அரசு எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அந்த நிறுவனம். “அப்போது அவர் பதிவிட்ட கருத்துக்கள் உடனடியாக ஒரு தாக்குதல் நடக்கும் என்பதைக் குறிக்கவில்லை” என்று கூறியுள்ளது.
இனிவரும் காலங்களில் இது போன்ற ஆபத்தான பதிவுகளை செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் கட்டாயமாக காவல்துறைக்குத் தெரிவிக்க வேண்டும் என, வலியுறுத்தும் புதிய சட்டத்தைக் கொண்டு வருவது குறித்து, தற்போது மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
