ஜெனிவாவில் நடைபெறும் United Nations Human Rights Council 61வது கூட்டத் தொடரில், ஐநா மனித உரிமைகள் உயர்மட்ட ஆணையாளர் Volker Türk இலங்கை குறித்து முக்கியக் கருத்துகளை வெளியிட்டார்.
அவர் தனது உரையில்,
இலங்கையில் போருக்குப் பிந்தைய பொறுப்புக்கூறல் செயல்முறைகள் மந்தமாக உள்ளன என்று குறிப்பிட்டார். கடந்தகால மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நம்பகமான மற்றும் சுயாதீன விசாரணைகள் அவசியம் என வலியுறுத்தினார். இதேவேளை காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு நீதி மற்றும் உண்மை வெளிப்படுத்தல் தேவை எனவும் தனது உரையில் கூறிய ஐநா மனித உரிமைகள் உயர்மட்ட ஆணையாளர் Volker Türk இலங்கையின் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் தாய்மார்களை விசேடமாகக் குறிப்பிட்டு கௌரவித்தார். அர்ஜென்டினாவின் புகழ்பெற்ற ‘பிளாசா டி மாயோ’ தாய்மார்களுடன் இவர்களை ஒப்பிட்ட அவர், நீதிக்கான இவர்களின் 15 ஆண்டுகாலப் போராட்டத்தை “அசைக்க முடியாதது” என்றும், அடக்குமுறை ஆட்சிக்கு எதிரான ஒரு மிகமுக்கிய சக்தி என்றும் வர்ணித்தார்.
மேலும் பயங்கரவாத தடுப்பு சட்டம் (PTA) போன்ற சட்டங்களில் மனித உரிமை தரநிலைகளுக்கு ஏற்ப சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்த அவர் மேலும், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் ஊடகங்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள் குறித்தும் கவலை வெளியிட்டார்.
அதேசமயம், நல்லிணக்கம், ஜனநாயக நடைமுறைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை வலுப்படுத்துவதில் இலங்கை அரசு தொடர்ந்து செயல்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
