வடக்கு மாகாணத்தை முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கான வசதி வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்கவும், நேர்மையான அரசியல் கலாசாரத்தை உருவாக்கவும் கட்சி பேதமின்றி அனைவரையும் அழைத்து நிற்கின்றோம் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.
வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாணத்திற்கு 2026 ஆம் ஆண்டு ஒரு அபிவிருத்தி ஆண்டாக இருக்கும். வடக்கு மாகாணத்திற்கு தேவையான அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் நாம் முழுமையாக பாடுபட்டு அபிவிருத்தி திட்டங்களை கொண்டு வர இருக்கின்றோம். கூடுதலான வேலைத் திட்டங்களை செய்ய இருக்கின்றோம்.
எங்களைப் பொறுத்த வரையில் கட்சி பேதங்களுக்கு அப்பால் சென்று 30 வருட யுத்தத்தால் பாதிக்கப்பட்டு, தென்பகுதியுடன் ஒப்பிடும் போது மிகவும் மோசமான நிலையில் வடபகுதி காணப்படுகன்றது.
எனவே பழைய அரசியல் கலாசாரத்தையோ அல்லது தோல்வியடைந்த அரசியல் கலாசாரத்தையோ கைவிட்டு ஆக்க பூர்வமான அரசியலை முன்னெடுத்து வடக்கு மாகாணத்தை முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கான வசதி வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்கவும், நேர்மையான அரசியல் கலாசாரத்தை உருவாக்கவும் கட்சி பேதமின்றி அனைவரையும் இரு கரம் கூப்பி வரவேற்று நிற்கின்றோம்.
இதன் மூலம் வடக்கு மாகாணத்தை இலங்கையின் சிறந்த மாகாணமாக மாற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனத் தெரிவித்தார்.


