செட்டிக்குளம் பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டு பாதீடு ஒதுக்கீட்டில் ஏற்பட்ட பாரபட்சம் காரணமாக தவிசாளருக்கும், உப தவிசாளருக்கும் இடையில் சபையில் கடும் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் வீடியோ வைரலாகியுள்ளது. இது தொடர்பில் உப தவிசாளர் தனது விளக்கத்தை வழங்கியுள்ளார். அதில்,
அன்பார்ந்த செய்தியாளர்களே முகநூல் நண்பர்களே வணக்கம் அந்த வீடியோவினை பகிர்ந்து கொள்ளும் எம் உறவுகளே எமது சபையின் ஊடாக செய்யும் மக்களுக்கான சேவைகளையும் பகிருங்கள் எமது சபை இணைய தளங்களை பாருங்கள் ஒவ்வோறு கௌரவ.. உறுப்பினரது முகநூலை பாருங்கள் நாம் செய்யும் சேவை தெரியும்.
செட்டிகுளம் பிரதேச சபை தொடர்பான இணையத்தில் பரவும் வீடியோ தொடர்பாக கடந்த மாதம் முன்வைக்கப்பட்ட வருடாந்த வரவு–செலவுத் திட்டம் தொடர்பில்,என் வட்டார மக்களின் நலன் குறித்த என் ஜனநாயகக் கருத்தை
நான் சபையின் முன் தெளிவாகவும், பொறுப்புடனும் முன்வைத்தேன்.
அதில் கௌரவ தவிசாளர் அவர்களே, கௌரவ உறுப்பினர்களே,மதிப்பிற்குரிய செயலாளரே இன்றைய தினம் முன்வைக்கப்பட்டுள்ள வருடாந்த வரவு–செலவுத் திட்டம் குறித்து என்னுடைய ஆழ்ந்த கவலையை, மேலும் மிகத் தெளிவான எதிர்ப்பையும் இச்சபையின் முன் பதிவுசெய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
என்னைச் சார்ந்த அடிப்படை ஜனநாயக உரிமை புறக்கணிக்கப்பட்டுள்ளது
பட்ஜெட் முன் தயாரிப்பு என்பது அனைத்து உறுப்பினர்களையும் இணைத்துக் கொண்டு ஒவ்வொருவரின் வட்டார தேவைகளை கேட்டு மக்கள் சார்ந்த கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட வேண்டிய மிக முக்கியமான பணியாகும்.
ஆனால், வருத்தத்துடன் தெரிவிக்க வேண்டியுள்ளதேனெனில், என்னை முற்றிலும் புறக்கணித்தபடியும், ஆலோசிக்காதபடியும், என் வட்டார மக்களின் கருத்துகள் எதையும் கேட்காதபடியும் இந்த பட்ஜெட் தாங்களாகவே தயாரிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு சாதாரண தவறு அல்ல .ஜனநாயக செயல்முறையை அவமதிக்கும், உறுப்பினர்களின் மரியாதையை புண்படுத்தும்,என் மக்கள் முன் என்னை கேவலப்படுத்தும்கீழ்தரமான செயல்.
எனது வட்டார மக்களின் வேலைத்திட்டங்கள் சேர்க்கப்படவில்லை.
2026ஆம் ஆண்டிற்கான வளர்ச்சி திட்டங்களை உருவாக்கும் நோக்கில் என் வட்டாரத்தில் நான் நேரடியாக மக்களிடத்தில் கருத்துக்களை சேகரித்தேன். பொதுக்கூட்டங்கள் நடத்தினேன்.
பாதீட்டு கலந்துரையாடல்கள் நடத்தினேன். மக்கள் தேவைகளைப் பதிவு செய்தேன். ஆனால், என் மக்கள் முன்வைத்த ஒரு திட்டமும் கூட இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.. இதன் பொருள் என்ன?
என் மக்களின் தேவைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. என் வாக்காளர்களின் நலன்கள் மதிக்கப்படவில்லை. என்னை அமோக வாக்குகளால் தெரிவு செய்த மக்களின் நம்பிக்கை மீறப்பட்டுள்ளது
இது மிகவும் வருத்தமானதும், கண்டிக்கப்படத்தக்கதுமான சூழல் ஆகும்.
இது திட்டமிட்ட பழிவாங்கும் வகை ஒதுக்கீடு. சிலருக்கு அதிகமாகவும் சிலருக்கு குறைவாகவும்
நியாயமற்றதும் சமநிலையற்றதுமான ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
அதிலும் மிகக் கடுமையான விசயம் என்னைத் திட்டமிட்டு குறைவான நிதி ஒதுக்கீடு செய்து அவமதிக்கும் தன்மையில் பட்ஜெட் தயார் செய்யப்பட்டிருக்கிறது..
இது தனிப்பட்ட பகைமையை வெளிப்படுத்தும் செயல். சபை ஒற்றுமையை சீரழிக்கும் செயல். மக்கள் உரிமைக்கு எதிரான செயல்.
எனவே இதை நான் வன்மையாக மறுக்கிறேன். இவ் பட்ஜெட் மக்கள் நலனுக்கானது அல்ல.
மக்களின் தேவைகளை பிரதிபலிக்காத பட்ஜெட். மக்கள் நலனுக்கான பட்ஜெட்டாகாது. மக்களின் கோரிக்கைகளும் உறுப்பினர்களின் கருத்துகளும் புறக்கணிக்கப்பட்டிருந்தால் அத்தகைய பட்ஜெட்டை நான் ஒப்புக்கொள்ள முடியாது.
அனைத்தையும் கருத்தில் கொண்டு நான் தெரிவிப்பது, இந்த பட்ஜெட்டுக்கு நான் எதிராக வாக்களிப்பேன் நியாயமான சீர் சிருத்தம் செய்யாமல் விட்டால் இந்த பட்ஜெட்டை நான் மறுப்பேன் .
ஏனெனில் நான் இங்கே என் பதவிக்காக அல்ல என் மக்களுக்காக இருக்கிறேன்.
என் வட்டார மக்களின் நலனை அவர்களின் உரிமையை அவர்களின் தேவைகளை
நான் எப்போதும் முன்னிலைப்படுத்துவேன்.
சபைக்கு எனது வேண்டுகோள். நாம் பகைமை, பழிவாங்கல், சமநிலையற்ற ஒதுக்கீடு என்னும் செயல்களை தவிர்த்து
நியாயமான, சமநிலை கொண்ட, அனைவரையும் உள்ளடக்கும் திருத்தப்பட்ட பட்ஜெட்டை உருவாக்க வேண்டும்.
அப்போது மட்டுமே இச்சபையின் மரியாதையும் நமது அரசியல் நம்பகத்தன்மையும் நாம் ஆற்றும் மக்கள் சேவையும்பாதுகாக்கப்படும்.
நன்றி. என எனது கருத்தை முன் வைத்தேன் அந்த கருத்து தனிப்பட்ட விரோதத்திற்காக அல்ல, யாரையும் அவமதிப்பதற்காக அல்ல,என் வட்டார மக்களின் உரிமைகள் மற்றும் தேவைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதெனும் ஒரு மக்கள் பிரதிநிதியின் கவலை மட்டுமே.
இதனிடையே, குறுக்கிட்ட ஒரு கௌரவ உறுப்பினர் ஒருவர் என் கருத்தை “சின்னப்பிள்ளை தனமானது” என குறிப்பிட்டமையினால் இந்த விவகாரம் தேவையற்ற வகையில் பெரிதாக்கப்பட்டது.
ஆனால், விளக்கங்களுக்குப் பின் புரிந்துணர்வுகளுடன் கலந்துரையாடல்களின் மூலம் கௌரவ. தவிசாளரது பெருந்தன்மையுடன் இந்த பிரச்சனை அன்றே தீர்வுக்கு வந்துள்ளது.
இன்று, அனைத்து கௌரவ உறுப்பினர்களும் கட்சி பேதமின்றி ஒற்றுமையுடன் மக்களுக்காக களத்தில் சேவையாற்றுகிறோம். எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை,தமிழ் தேசிய கட்சிகளின் ஆதரவுடனேயே ஐக்கிய மக்கள் சக்தியின் சாராபாக றிசாட் தரப்பு செட்டிகுளம் பிரதேச சபையில் முதல் முறையாக ஆட்சி அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


