திருகோணமலையில் ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி விகாரையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையொன்றை வைத்துள்ளமை தொடர்பாக பலாங்கொட கஸ்ஸப தேரரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இன்று அழைப்பாணை உத்தரவினை பிறப்பித்துள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கஸ்ஸப தேரருக்கு நீதவான் எம்.என்.எம்.சன்சுதீன் அழைப்பாணை உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
திருகோணமலையில் ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி விகாரைக்குச் சொந்தமான காணியில் புத்தர் சிலையை நிறுவச் சென்றபோது நடைபெற்ற குழப்பமான சூழல் தொடர்பாக பொலிசாரிடம் வாக்குமூலம் வழங்குவதற்கு பலாங்கொட கஸ்ஸப தேர் மறுத்துள்ளதாக மன்றில் பொலிசார் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
நீதிமன்றத்தில் பி அறிக்கையை சமர்ப்பித்துள்ள பொலிசார், கடந்த 16ஆம் திகதி ஏற்பட்ட குழப்பத்தின் பின்னர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பலாங்கொட கஸ்ஸப தேரரிடம் வாக்குமூலம் பெற முயற்சித்ததாகவும், ஆனால் அவர் மறுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இலங்கை தண்டனைச் சட்டத்தின் பிரிவு 184 இன் கீழ் இது தண்டனைக்குரிய குற்றம் என்றும், விசாரணைகளுக்கு ஒத்துழைப்பது அனைத்து குடிமக்களின் கடமை என்றும் பொலிசார் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளனர்.


