வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தின் முன்னாள் தலைவர் மற்றும் செயலாளர் பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவில் இன்று விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
நெடுங்கேணி வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தின் முன்னாள் தலைவர் செ.சசிகுமார் மற்றும் செயலாளர் து.தமிழ்ச்செல்வன் ஆகியோரை விசாரணை ஒன்றுக்கு வருமாறு வவுனியா பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவுபொலிசாரால்(ரிஐடி) கடந்த இருதினங்களுக்கு முன்பாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து குறித்த இருவரும் வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவின் அலுவலகத்தில் இன்றையதினம் காலை ஆயராகினர். அவர்களிடம் ஆலயம் தொடர்பாகவும் ஏனைய பல விடயங்கள் தொடர்பாகவும் வாக்குமூலங்கள் பெறப்பட்டிருந்தது.
விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்கள்
குறித்த விசாரணையின் போது எமது ஆலயம் சார்ந்த விடயங்களையும், எமது தனிப்பட்ட தகவல்களையும் கேட்டிருந்தனர். நாம் அனைத்திற்கும் பதில் அளித்திருந்தோம்.
அந்த வகையில் மதம் சார்ந்த பணிகளை முன்னின்று மேற்கொள்பவர்களை அச்சுறுத்தி நசுக்கும் செயற்பாடாகவே இதனை பாக்கவேண்டியுள்ளது.
குறிப்பாக எமது ஆலயத்தின் விக்கிரகங்கள் உடைக்கப்பட்ட விடயம் தொடர்பாக இதுவரை எவரும் கைதுசெய்யப்படாத நிலையில் எங்களை மாத்திரம் தொடர்ச்சியாக விசாரணை செய்கின்றனர் என தெரிவித்தனர்.
