யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கேவிலில் இருந்து பருத்தித்துறை நோக்கி புறப்பட்ட அரச பேருந்து நேற்று பலமுறை பழுதடைந்து வீதியின் இடை நடுவில் நின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது
நேற்று அதிகாலை கோவிலில் இருந்து பருத்தித்துறை நோக்கி புறப்பட்ட அரச பேருந்து மருதங்ககேணியில் பழுதடைந்து காணப்பட்டது.
பழுது நீக்கி மருதங்கேணியில் இருந்து புறப்பட்ட குறித்த பேருந்தானது மீண்டும் இடை நடுவே பழுதடைந்து காணப்பட்டது.
பின்னர் அங்கிருந்து பருத்தித்துறை நோக்கி பயணிகளை ஏற்றிக் கொண்டு மீண்டும் தனது பயணத்தை ஆரம்பித்தது.
மீண்டும் அதே பேருந்து கோவில் நோக்கி நேற்று மாலை பருத்தித்துறையில் இருந்து புறப்பட்டது
அதிகளவான பயணிகளை ஏற்றி வந்த குறித்த பேருந்து மீண்டும் நாகர்கோவில் பகுதியில் பழுதடைந்தது. இதனால் குடாரப்பு தொடக்கம் கோவில் வரை செல்ல வேண்டிய பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இரவு வேளையில் குழந்தைகளுடன் பலர் வீதியில் இருப்பதை காணக்கூடியதாக இருந்தது.
வடமராட்சி கிழக்கு மக்களின் தொடர் கோரிக்கையான வடமராட்சி கிழக்கு பகுதிக்கு சிறந்த தரமான ஒரு பேருந்து சேவை ஒன்றை வழங்குமாறு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் போன்ற பல சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அண்மையில் வடமராட்சி வடக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் குறித்த விடயம் தொடர்பாக பேசப்பட்டபோது 750. வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் நல்ல நிலையிலுள்ள பேருந்தை வடமராட்சி கிழக்கிற்க்கான சேவையிலீடுபடுத்துமாறு வடமராட்சி வடக்கு ஒருங்கிணைப்பு குழு தலைவரும் ஒருங்கிணைப்பு தலைவருமான திரு.றஜீவன் உத்தரவிட்டிருந்தார். ஆனாலும் பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சாலை முகாமையாளர் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
மக்களின் கோரிக்கை இன்று வரை தீர்க்கப்படவில்லை இதனால் வடமராட்சி கிழக்கில் சேவையில் ஈடுபடும் அரச பேருந்துகள் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது.
இந்த அவல நிலையை கருத்தில் கொண்டு சிரமம் இன்றி சேவையில் ஈடுபடக் கூடிய நல்ல தரமான ஒரு அரச பேருந்தை சேவையில் ஈடுபட வழிவகை செய்யுமாறு நாளை பருத்தித்துறைக்கு வரவிருக்கும் போக்குவரத்து அமைச்சர் கவனத்திற்கும் கொண்டு செல்லுமாறு வடமராட்ச்சி கிழக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.