ஏப்ரல் 21 தாக்குதல் விசாரணைகளை வெளிப்படை தன்மையுடன் முன்னெடுப்பதற்கு அரசாங்கமே தடையை ஏற்படுத்தியிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர பதவியிலிருக்கும் போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளை நியாயமாக முன்னெடுக்க முடியுமா என்ற சந்தேகம் தமக்கு உள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
ஏப்ரல் 21 விசாரணைகளின் போது அருண ஜயசேகர சாட்சியமளித்திருக்கின்றார். அவருக்கு கீழ் பணியாற்றிய அதிகாரிகளும் சாட்சியளித்திருக்கின்றனர்.
இந்தநிலையில், குறித்த விசாரணைகளை முறையாக முன்னெடுத்துச் செல்வதற்கு இடமளிக்க வேண்டும் என அவர் நினைத்தால், நிச்சயம் பதவி விலகியிருப்பார் என திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், அருண ஜயசேகர அதை செய்யாததன் காரணமாகவே எதிர்க்கட்சிகள் அவருக்கெதிராக அவநம்பிக்கை பிரேரணையை சமர்ப்பித்துள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நம்பிக்கையில்லா பிரேரணையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த பக்க சார்பற்ற விசாரணைகளுக்கு சவால் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


