50க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை மூடுவது தொடர்பில் முக்கிய அறிவிப்பு!
50க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்து பாடசாலைகளையும் ஒரே தடவையில் மூடுவதற்கு கல்வி அமைச்சு எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லை என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நலக கலுவேவா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” ஒவ்வொரு கல்வி வலயத்திலும் உள்ள பாடசாலைகளை வலுப்படுத்துவதற்கான ஒரு திட்டம் ஏற்கனவே நடந்து வருகின்றது. ஒரு குறிப்பிட்ட பாடசாலைகளைப் பராமரிக்கும் போது மட்டுமே மூடுவதற்கான பரிசீலனை மேற்கொள்ளப்படும்.
நாடு முழுவதும் உள்ள 10,194 பாடசாலைகளில் மொத்தம் 1,486 பாடசாலைகளில் 50க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே கல்வி பயின்று வருகின்றனர்.
மேலும் குறைந்த மாணவர் சேர்க்கை உள்ள பாடசாலைகளை மூடிவிட்டு அருகிலுள்ள பாடசாலைகளுக்கு மாணவர்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதற்கிடையில், இலங்கை அதிபர்கள் சங்கம் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. மாணவர்களை அருகிலுள்ள பாடசாலைகளுக்கு மாற்றுவது நகர்ப்புற வகுப்பறைகளில் நெரிசலை அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
