கச்சதீவை ஒருபோதும் இந்தியாவுக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அவர் இதனை கூறினார்.
“கச்சதீவை மீட்டு தமிழக கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு பிரதமர் மோடி தீர்வை வழங்க வேண்டும்” என, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், நடிகர் விஜய் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் விஜித ஹேரத் பதில் அளித்தார்.
தற்போது தென்னிந்தியாவில் தேர்தல்காலம் ஏற்பட்டுள்ளதால், தமது அரசியல் தேவைகளுக்காக ஒவ்வொருவரும் வெவ்வேறு கருத்துக்களை கூறிவருவதாக அவர் கூறினார்.
அவ்வாறான அரசியல் கருத்துக்களை பொருட்படுத்த வேண்டிய தேவையில்லை எனவும், இராஜதந்திர மட்டத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் தொடர்பில் கவனம் செலுத்த முடியும். கச்சதீவு என்றென்றும் இலங்கைக்கே சொந்தமானது” எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
