வரலாற்றில் முதல் முறையாக அபாகஸ் மனக் கணித முறையில் 2510 மாணவர்கள் இணைந்து 8 நிமிடங்களில் 554,500 கணக்குகளுக்கு விடையெழுதி சோழன் உலக சாதனை படைத்தனர்
யூசீமாஸ் எனப்படும் அபாகஸ் பயிற்சி நிறுவனம் இந் நிகழ்வை கொழும்பில் அமைந்துள்ள அலரி மாளிகையில் வைத்து சனிக்கிழமை நடத்தியது.
இதில் இலங்கையின் எல்லா மாவட்டங்களைச் சேர்ந்த தீவிர பயிற்சி பெற்ற மாணவர்கள் 2510 பேர் பங்கு கொண்டனர்.
இந்தியாவில் தலைமைச் செயலகம் கொண்டுள்ள சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனம் சார்பில் தமிழ்நாட்டில் இருந்து சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் பன்னாட்டு ஒருங்கிணைப்பாளர் ரோபோ விஞ்ஞானி கார்த்திகேயன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்களான சுகிர்தா, வனிதா மற்றும் செயற்குழு உறுப்பினர் செல்வகுமார் மற்றும் அமெரிக்காவில் இருந்து போன்றோர் சிறப்பு நடுவர்களாக உலக சாதனை நிகழ்வைக் கண்காணித்து உறுதி செய்தார்கள்.
இவர்களுடன் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் நடுவர்கள் 15 பேர் இணைந்து உலக சாதனை படைக்கும் முயற்சியைக் கண்காணித்தார்கள்.
சோழன் உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்ட மாணவர்கள் 2,3,4, எண்கள் கொண்ட கூட்டல், பெருக்கல், கழித்தல் மற்றும் வகுத்தல் கணக்குகளுக்கு விடையளித்தார்கள். இக் கணக்குகள் 2 முதல் 10 அடுக்குகள் வரை வரிசைப்படுத்தப்பட்டிருந்தன
சோழன் உலக சாதனை படைத்த மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் நடுவர்களால் வழங்கப்பட்டன.
அங்கு பேசிய சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் பன்னாட்டு ஒருங்கிணைப்பாளர் ரொபோ விஞ்ஞானி கார்த்திகேயன் குறிப்பிடுகையில் உலக வரலாற்றில் அபாகஸ் மனக் கணித முறையில் மிகவும் கடினமான மற்றும் அதிக எண்ணிக்கையிலான கணக்குகளுக்கு 8 நிமிடங்களில் தீர்வு எழுதியது இதுவே முதல் முறை எனக் கூறினார்.
