மன்னாரின் மேற்க்கொள்ளப்படும் கனியவள அகழ்வுக்கு எதிராக வவுனியா இளைஞர்களின் ஏற்பாட்டில் சுற்றுச்சூழலுக்கான இளைஞர் நடவடிக்கை அமைப்பின் பங்கேற்புடன் கருநிலம் என்னும் தொனிப்பொருளில் கவனயீர்ப்பு போராட்டம் வவுனியா பழைய பேருந்து நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்றது.
இன்று மாலை 3 மணிக்கு இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் பறை முழங்கி மக்களுக்கு போராட்டத்தின் அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது. அதன்பின்னர் “இந்த மண் எங்களின் உரிமை” “எங்கள் எதிர்காலத்திற்கான வளத்தை அழிக்காதே” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு கோஷங்களை எழுப்பி இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் பின்னர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து மணிக்கூட்டு கோபுர சந்தி வழியாக கடை வீதியூடாக சென்று கொரவப்பதான வீதியில் சென்று தமது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதன்போது வவுனியா மாவட்ட இளைஞர்கள், மன்னார் மாவட்டத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள், மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் செ. மயூரன், கலைஞர் மாணிக்கம் ஜெகன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
