கனடாவின் அல்பர்ட்டா மாகாண அரசு, தனது செலவு விவரங்களை வெளியிடும் கொள்கையில் (expense disclosure policy) திடீரென மாற்றங்களை அறிவித்துள்ளது.
இந்த மாற்றங்களின்படி, மூத்த அதிகாரிகள் 100 டொலருக்கு மேல் செய்யும் செலவுகளுக்கான ரசீதுகளை இனி பொதுவெளியில் சமர்ப்பிக்கத் தேவையில்லை.
மேலும், இந்த புதிய கொள்கை அமல்படுத்தப்பட்டதன் மூலம், கடந்த எட்டு ஆண்டுகளாக இணையதளத்தில் பொதுவெளியில் இருந்த செலவு அறிக்கைகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன.
ஓகஸ்ட் 1 ஆம் திகதி வெளியிடப்பட்ட புதிய கொள்கையின்படி, மாகாணத்தின் முதல்வர், அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் செய்யும் செலவுகளுக்கான ரசீதுகள் பொதுமக்களின் பார்வைக்கு இனிமேல் கிடைக்காது எனத் தெரிய வருகின்றது.
இந்த மாற்றங்கள் “அரசாங்க செயல்பாடுகளை மேம்படுத்தவும்” மற்ற மாகாணங்களின் கொள்கைகளோடு ஒத்திசைவு (alignment) செய்யவும் கொண்டு வரப்பட்டுள்ளதாக, அல்பர்ட்டா மாகாண நிதி அமைச்சர் நேட் ஹார்னரின் (Nate Horner) ஊடகச் செயலாளர் மரிசா ப்ரீஸ் (Marisa Breeze) தெரிவித்துள்ளார்.
எனினும், அல்பர்ட்டா மாகாணத்தில் கொண்டுவரப்படும் இந்த மாற்றங்கள் வெளிப்படைத்தன்மையை குறைப்பதாக பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத் தக்கது.
