காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் வீடொன்றில் அத்துமீறி உள் நுழைந்து, தனிமையிலிருந்த பெண்ணின் கையைப்பிடித்து இழுக்க முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட திருமணசேவை புரோக்கரை எதிர்வரும் 12 ம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதமன்ற நீதவான் நேற்று வெள்ளிக்கிழமை(25) உத்தரவிட்டார்.
குறித்த பிரதேசத்தில் கடந்த ஒருவருடத்திற்கு முன்னர் திருமண புரோக்கர் ஒரு பெண் ஒருவரை ஆண் ஒருவருக்கு திருமணம் பேசி முடித்துவைத்து அதற்கான தரகு பணத்தை பெண் மற்றம் மாப்பிளை வீட்டாரிடம் பெற்றுக் கொண்டார்.
இந் நிலையில் அண்மையில் திருமணம் முடித்த பெண்ணின் கணவர் வேலைக்குச் சென்ற பின்னர் வீட்டில் பெண் தனிமையிலிருந்து வந்துள்ள நிலையில் வீட்டின் வாசல் கதவை திறந்து சட்டவிரோதமாக உட் சென்று வாசல் கதவில் அவரது தொலைபேசி இலக்கத்தை வைத்துவிட்டு சென்றுள்ளார்.
திருமண புரோக்கரின் செயற்பாடு தொடர்பாக கணவனிடம் மனைவி தெரிவித்ததையடுத்து அவரை கணவர் தொலைபேசி ஊடாக எச்சரித்த நிலையில் குறித்த திருமண புரோக்கர் சம்பவதினமான வியாழக்கிழமை (24) மதியம், பெண்ணின் வீட்டிற்குள் உள்நுழைந்து தனிமையில் இருந்த பெண்ணின் கையை பிடித்து இழுக்க முற்கட்டதையடுத்து குறித்த பெண் வீட்டை விட்டு வெளியேறி அயலவர் வீட்டிற்குள் புகுந்துள்ளதாக பொலிசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இப்பெண் பொலிஸ் நிலைய பெண்கள் பிரிவில் செய்த முறைப்பாட்டுக்கமைய 2 பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய திருமண புரோக்கரை கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நீதவான் முன்னிலையில் வெள்ளிக்கிழமை (25) ஆஜர்படுத்தியதையடுத்து அவரை எதிர்வரும் 12 ம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
