திருகோணமலை திருக்கடலூர் பகுதியில் மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பொதுமக்கள் இன்று (05) காலை பிரதான வீதியில் போராட்டம் ஒன்றினை நடத்தினர்.
கடந்த செவ்வாய்க்கிழமை (03) திருக்கடலூர் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், வாழைச்சேனை கடல் பகுதியில் சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, திடீரென இனம் தெரியாத நபர்கள் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்த சம்பவத்தை கண்டித்தும், தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், திருக்கடலூர் பகுதி மக்கள் திருகோணமலை – நிலாவெளி பிரதான சாலையில் போராட்டம் ஒன்றினை நடத்தினர்.
இப் போராட்டத்தில் கலந்து கொண்ட போராட்டக்காரர்கள், “மீனவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்”, “கடலில் வன்முறை செய்தவர்களை கண்டறிந்து தண்டிக்க வேண்டும்” எனக் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
போராட்டமானது சுமார் இரண்டு மணி நேரத்திற்கு நீடித்தது.
இதுகுறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

