கடந்த காலங்களில் சரியான வகையில் விசாரணைகளை மேற்கொள்ளாமல் விடுதலை செய்யப்பட்ட அரசியல் வாதிகள் மற்றும் கிழக்கு மாகாணத்தில் இருக்கும் சில நபர்களுக்கு எதிராகவும் மிகவிரைவில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றதுடன், இந்த நாட்டில் இடம்பெற்ற எல்லாவிதமான குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டம் இன்று சனிக்ககிழமை (29) பழைய கச்சேரி மண்டபத்தில் பிரதி அமைச்சர் தலைமையில் இடம்பெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாங்கள் யாரையும் அரசியல் ரீதியாக பழிவாங்கவில்லை இதற்கு முதலிலே அரசியல் ரீதியாக பல்வேறுபட்ட அரசியல்வாதிகள் பழிவாங்கப்பட்ட வரலாறு இருக்கின்றது 1950,60,70,80, 90, 2 ஆயிரத்துக்கு பிற்பட்ட காலமாக இருக்கலாம் இப்படிப்பட்ட பல்வேறு விடையங்கள் நாட்டிலே நடந்திருக்கின்றது.
1977 ம் ஆண்டு ஜக்கிய தேசிய கட்சி அரசாங்கம் பொலிஸ் திணைக்களத்துக்கு ஒரு விடுமுறையை வழங்கி மக்களுக்கும் எதிர்கட்சிக்கும் , சிறுபான்மைக்கும் எதிராக வன்முறையை கட்டவிழ்த்துவிட்டது. அப்படிப்பட்ட நாட்டிலே நாங்கள் வாழுகின்றோம்.
எனவே நாங்கள் பழிவாங்கும் செயற்பாடுகளுடன் செயற்பட்டிருந்தோம் என்றால் எவ்வளவோ வேலையை செய்திருக்கலாம். ஆனால் நாங்கள் சட்டரீதியாக ஒப்புவிக்கப்படுவதன் பிரகாரம் நாங்கள் அவர்களுக்கு எதிராக சரியான முறையில் சட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
கடந்த காலங்களில் சரியான வகையில் விசாரணைகளை மேற்கொள்ளாமல் விடுதலை செய்யப்பட்ட அரசியல் வாதிகள் கூட எதிர்வரும் காலங்களில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இருக்கும் சில நபர்களுக்கு எதிராகவும் மிகவிரைவில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. இதுவும் அரசியல் பழிவாங்கல் அல்ல பிழை செய்திருந்தால் உங்களுக்கு எதிராக அரசாங்கம் என்ற அடிப்படையில் நடைமுறைப்படுத்துவோம் இதற்கு தான் மக்கள் எங்களுக்கு அனுமதியளித்துள்ளனர்.
பட்டலந்தை ஆணைக்குழு தொடர்பான விவாதம் இப்போதாவது வந்தது என்பது சந்தோஷமானது சம்பவம் துக்கமான விடையமாக இருந்தாலும் அரசியல் ரீதியாக இப்போது பெரும் விவாதமாக எடுக்கப்படுகின்றது.
இந்த நாட்டில் மக்கள் விடுதலை முன்னணிக்கு நடந்தது என்று பார்ப்பதை விட இது ஒரு உதாரணம் இந்த நாட்டில் சட்டவிரோதமான படுகொலைகள் அரச ஒடுக்கு முறைகள் போன்ற பல்வேறுபட்ட விடையங்கள் இருந்தது என சொல்வதற்கான ஒரு உதாரணமாகும்.
பாராளுமன்றத்தில் விவாதம் இடம்பெற்று வருகின்றதுடன் நடைபெற்ற எல்லா விடையங்கள் தொடர்பாக விசாரிக்கப்படும்
அரசாங்கத்தை பொறுப்பெடுக்கும் போது உண்மை அறியும் ஆணைக்குழுவை நியமித்து இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுவோம் என தெரிவித்தோம். அதற்காக மக்கள் 5 வருடத்துக்கு ஆட்சியை தந்துள்ளனர். அதன் பிறகு மக்கள் ஆட்சியை தரப் போகின்றனர் எனவே படிப்படியாக அறிக்கை செய்யப்பட்ட விடையங்களை ஒரே தடவையில் தீர்மானிக்க முடியாது எனவே இந்த விடையங்களை செய்ய 6 மாதகாலம் செல்லும்.
இந்த அடிப்படையில் உண்மையறியும் ஆணைக்குழு முக்கியமாக நல்லிணக்கத்தை கட்டியொழுப்புவதற்கு சாதகமாக இருக்கும் அதேவேளை நல்லிணக்கத்தை சிதைக்கின்றதாக இருக்க முடியாது. இது ஒரு நீண்ட தூர பயணம்.
நாட்டில் ஜனநாயக ரீதியாக ஒரு பாரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளோம். இவ்வாறு எந்தவொரு நாட்டிலும் ஜனநாயக ரீதியாக மாற்றம் இடம்பெறவில்லை. அந்த அடிப்படையில் இன்று பாரிய மாற்றம் வந்துள்ளது போதும் ஆங்காங்கே பழைய ஆட்சியாளர்களின் எச்சங்கள் வெளிவருவது இருக்கின்றது. ஒட்டு மொத்தமான மக்கள் இந்த மாற்றத்தை உணர்ந்து கொண்டுள்ளனர்.
வாழ்க்கை சுமையை படிப்படியாக குறைந்து வருகின்றது. ஊழல் மோசடி இல்லாத கலாச்சாம் மற்றும் அரசியல் கலாச்சாரம் இடம்பெற்றுள்ளது. கடந்த காலங்களில் அமைச்சரே அல்லது ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு பல வாகனங்களில் பிரயாணித்தனர். அதற்கு டீசல் பெற்றோல் மக்களின் பணத்தில் ஆனால் இன்று நாங்கள் வாகனத்தை குறைத்து பாதுகாப்பு இல்லாமல் செய்தமையால் யாரோ ஒருவருடைய சாட்டு தட்டில் உணவு அதிகரிக்கப்பட்டுள்ளது எனவே எங்களால் மக்களுக்கு வரபிரசாரங்கள் இயல்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
எனவே இந்த நாட்டில் இடம்பெற்ற எல்லாவிதமான குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் அதே ரீதியில் நாட்டில் ஒரு குரோதத்தை வளர்க்க இடமளியோம். அந்த வகையில் எல்லோரும் வாழக்கூடிய நாட்டை உருவாக்குவோம் என்றார்.