2025 ஆம் ஆண்டு நாடளாவிய ரீதியில் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு கையேற்கும் நிகழ்வு இன்றைய தினம்(20) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்தது.
இதன் பிரகாரம் முல்லைத்தீவு மாவட்டத்தில் நான்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு கையேற்கும் நிகழ்வு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகரும், மாவட்ட அரசாங்க அதிபருமான திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையிலும் மற்றும் உள்ளூராட்சி சபைக்கான தெரிவத்தாட்சி அலுவலகரும், முல்லைத்தீவு மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளருமான திருமதி சசிகுமார் சிந்துஜா அவர்களின் ஏற்பாட்டிலும் நடைபெற்றது.
உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுவதற்காக கடந்த 17,18,19 ஆம் திகதிகளிலும் அதன் தொடர்ச்சியாக இன்றைய தினமும்(20) நண்பகல் 12.00 மணிவரையும் வேட்புமனு கையேற்கும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று , புதுக்குடியிருப்பு , துணுக்காய், மாந்தை கிழக்கு ஆகிய நான்கு பிரதேச சபைகளில் மொத்தமாக 41 வட்டாரங்களில் போட்டியிடுவதற்காக கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் அடங்கலாக 44 அணியினர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.
குறித்த கட்டுப்பணம் செலுத்திய கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் கடந்த மூன்று நாட்களிலும் இன்றைய தினமும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இன்றைய தினம்(20) நண்பகல் 12.00 மணியுடன் வேட்புமனுதாக்கல் நிறைவுக்கு வந்தநிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் அடங்கலாக 38 அணிகள் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
கரைதுறைப்பற்று பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக 10 கட்சிகளும், 2 சுயேட்சைக்குழுக்களும், வேப்புமனு தாக்கல் செய்ததோடு புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக 7 கட்சிகளும் 3 சுயேட்சைக்குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
மேலும் துணுக்காய் பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக 6 கட்சிகளும், 2 சுயேட்சைக்குழுக்களும் வேட்புனு தாக்கல் செய்ததோடு, மாந்தைகிழக்கு பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக ஆறு கட்சிகளும் 2 சுயேட்சைக்குழுக்களும் வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.
இதில் மொத்தமாக 38 அணிகள் வேட்புமனு தாக்கல் செய்ததுடன் 34 அணிகளின் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
4 அணிகளின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளன. இதில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் 2 சுயேட்சைக் குழுக்களினதும், கரைதுறைப்பற்று பிரதேச சபையில் போட்டியிடும் 2 அரசியல் கட்சிகளினதும் வேட்புமனுக்களே நிராகரிக்கப்பட்டுள்ளன. பொதுஜன ஐக்கிய பெரமுன கட்சி, ஸ்ரீலங்கா மகஜன பக்சய ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலானது எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 87790 வாக்காளர்கள் இம்முறை வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.
இதில் கரைதுறைப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட 13 வட்டாரங்களில் 31514 பேரும், புதுக்குடியிருப்பு பிரதேசசபைக்குட்பட்ட 12 வட்டாரங்களில் 41212 பேரும், துணுக்காய் பிரதேச சபைக்குட்பட்ட 8 வட்டாரங்களில் 8660 பேரும், மாந்தைகிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட 8 வட்டாரங்களில் 6354 பேரும் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.