பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அறிக்கையிலுள்ள விடயங்கள் தொடர்பில் மேலும் பரிசீலித்து பரிந்துரை முன்வைப்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் எதிர்வரும் சில நாட்களில் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாகவும் இந்த அறிக்கையை சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
நீதிமன்றம் மற்றும் சட்டத்துறை சார்ந்தவர்களை உள்ளடக்கிய வகையில் ஜனாதிபதியினால் இந்தக் குழு நியமிக்கப்படவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை இதுவரையில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அல்ஜசீரா தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றுக்கு தெரிவித்திருந்தார்.
அதனால் இந்த விசாரணை அறிக்கையை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்நிலையில், அந்த அறிக்கையை மூன்று மொழிகளிலும் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருக்கிறோம்.
அதற்கமைய, 2000ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட பட்டலந்த வீடடுத்திட்டத்தில் சட்டவிரோத இடங்கள் மற்றும் வதைமுகாம்களை முன்னெடுத்துச் சென்றமை தொடர்பில் விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மூன்று மொழிகளிலும் அச்சிடப்பட்டு சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையிலுள்ள விடயங்கள் தொடர்பில் தொடர்ந்தும் பரிசீலனை செய்து பரிந்துரை முன்வைப்பதற்கான குழு நியமிக்கப்படும். இன்னும் சில தினங்களில் அதற்கான நடவடிக்கைகள் இடம்பெறும்.
மேலும் இந்த அறிக்கையை சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்ட மா அதிபர் மற்றும் ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் நீதிமன்றம் மற்றும் சட்டத்துறைக்கான குழு ஆகிய தரப்பினரின் பரிந்துரைகளை உள்ளடக்கி இதுதொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுப்போம்.
அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் நீதிமன்றமே நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்கு அவசியமான முறைகளை நாங்கள் உருவாக்கிக் கொடுப்போம்.
இந்த நாட்டில் மேற்கொள்வதற்கு பல்வேறு விடயங்கள் இருக்கின்றன. அந்தப் பிரச்சினைகளுக்கு பதில் தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பிலேயே இதற்கு முன்னர் இலங்கையில் ஆட்சியமைக்காத மக்கள் விடுதலை முன்னணிக்கு மக்கள் அதிகாரத்தைப் பெற்றுக்கொடுத்தார்கள்.
ஆட்சியை பொறுப்பேற்று நான்கு மாதங்களாகின்றன.
எனவே, முதலில் மக்களின் வாழ்வாதார மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கிறோம். ஜனநாயகம், மனித உரிமைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளோம்.
எனவே மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே முதல் கடமை. கொலைச் சம்பவங்கள் தொடர்பில் நீதியைப் பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுப்போம் என்றார்.