எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத்தேர்தலில் கொழும்புவாழ் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, கொழும்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடமிருந்து இலங்கைத் தமிழரசுக்கட்சி விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத்தேர்தலின்போது கொழும்புவாழ் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தமிழரசுக்கட்சி கொழும்பு மாநகரசபையில் ஆசனங்களைக் கைப்பற்றுவது தொடர்பில் கட்டம் கட்டமாக ஆலோசனை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து கட்சியின் மத்திய செயற்குழுவில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் கொழும்புக்கிளைத் தலைவர் சி.இரத்தினவடிவேல் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்கமைய முதற்கட்டமாக எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களைத் தெரிவுசெய்யும் பொருட்டு கட்சியின் செயற்பாட்டாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
இத்தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட விரும்புபவர்கள் தமது முழுப்பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், வட்டாரம், அரசியல் செயற்பாடுகளில் கொண்டிருக்கும் அனுபவம் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியவகையில் செயலாளர், இலங்கைத் தமிழரசுக்கட்சி, இலக்கம் 40, மாட்டின் வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரியின் ஊடாக கட்சியின் தலைமைச் செயலகத்துக்கு அனுப்பிவைக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்துக் கருத்து வெளியிட்டிருக்கும் கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், தற்போது நாட்டில் தோற்றம் பெற்றிருக்கும் அரசியல் கலாசாரத்துக்கு ஈடுகொடுக்கும் விதமாகவும், கொழும்புவாழ் தமிழ் மக்களால் நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டுவரும் கோரிக்கைக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையிலும் கட்சியினால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.