இலங்கையின் 77ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நாளை (04) காலை, சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளன.
அதன்படி, நாளை பாதுகாப்புக்காக 1,000க்கும் மேற்பட்ட பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளனர். கொழும்பில் இன்று (03) காலை நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க மனதுங்க இதனை தெரிவித்தார்.
நிகழ்வுக்கு வருபவர்கள் பரிசோதிக்கப்பட்டு பின்னர் சுதந்திர தின விழாவிற்கு அனுப்பப்படுவார்கள் என்றும் சுதந்திர தின விழாவில் ஏராளமானோர் பங்கேற்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
மேலும், நாளை விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சகல அழைப்பாளர்களும் காலை 7 மணிக்கு முன்னதாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து தங்கள் இருக்கைகளில் அமருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று வீதி போக்குவரத்து பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்தார்.
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகம் இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்களை குறைந்த செலவில், பொதுமக்களுக்கு குறைந்தபட்ச இடையூறுகளுடன், அதிக பொது மக்களின் பங்கேற்புடன் நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக முப்படை வீரர்களின் எண்ணிக்கை 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் அணிவகுப்புக்கு முப்படை கவச வாகனங்களைப் பயன்படுத்தாமலிருக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.