தோட்ட தொழிலாளருக்கு 2000 அடிப்படை சம்பளம் பட்ஜட்டில் அறிவிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் உரையாற்றியதாவது,
அரசாங்கத்தின் 100 நாட்கள் செயற்பாடுகள் பற்றியும், ஏழ்மை, வறுமை, அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் பற்றி பல்வேறு கருத்துக்கள் குறிப்பிடப்பட்டன. இலங்கை தீவுக்குள் பெருந்தோட்டம் என்றதொரு தீவு உள்ளதை அனைவரும் கருத்திற் கொள்ள வேண்டும்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த காலங்களில் எம்முடன் இணக்கமாக செயற்பட்டார். கடந்த பாராளுமன்றத்தில் பெருந்தோட்ட மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து சபை ஒத்திவைப்பு பிரேரணையை நான் முன்வைத்தபோது அதனை அநுரகுமார திசாநாயக்க வழிமொழிந்தார். ஆகவே மலையக மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதிக்கு புதிதாக குறிப்பிட வேண்டிய தேவையும் கிடையாது.
தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு அமைய பெருந்தோட்ட மக்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும். கடந்த அரசாங்கம் 900 ரூபா சம்பள அதிகரிப்பையும், இடைக்கால அரசாங்கம் 1700 ரூபா சம்பள அதிகரிப்பையும் வழங்கியது. இருப்பினும் 1300 ரூபாவே கிடைக்கப் பெற்றது. ஆகவே 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட மக்களுக்கு 2000 ரூபாய் சம்பளத்தை வழங்க வேண்டும் என்ற யோசனையை முன்வைக்கிறேன்.
அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜா தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஆகவே அவர் இந்த 2,000 ரூபா சம்பள அதிகரிப்புக்கு ஒத்துழைப்பு வழங்குவார் என்று எதிர்பார்க்கிறேன். அதேபோல் பெருந்தோட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தொழிற்சங்கங்களும் இந்த 2,000 ரூபா சம்பள அதிகரிப்புக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
தேயிலை ஏற்றுமதிக்கு அறவிடப்படும் செஸ் வரியில் ஒரு பகுதியை பெருந்தோட்ட கம்பனிகளுக்கு வரிச் சலுகையாக வழங்கி இந்த சம்பள உயர்வை வழங்கும்படி அரசை கோருகிறேன். இலங்கையில் மிகவும் பின்தங்கிய மக்களான பெருந்தோட்ட மக்களை கைதூக்கி விடாமல் நாட்டில் உண்மை சமத்துவம் ஏற்பட முடியாது’’ என்றார்.