தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவில் பதிவு செய்யப்படாத கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட தொடர்பாடல் சாதனங்களைப் பயன்படுத்துவதற்கு எதிர்காலத்தில் இலங்கையில் தடை விதிக்கப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் தொடர்பாடல் உபகரணங்களை கொண்டு வருவதை தடுப்பதே இதன் நோக்கம் என அதன் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் பந்துல ஹேரத் தெரிவித்துள்ளார்.
அதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை இம்மாத இறுதிக்குள் அறிமுகப்படுத்த இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.
எவ்வாறாயினும், தற்போது பாவனையில் உள்ள கையடக்க தொலைபேசிகளுக்கு இந்த புதிய வேலைத்திட்டம் இடையூறு ஏற்படுத்தாது என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் பந்துல ஹேரத் தெரிவித்துள்ளார்.
முறையான தரமற்ற தகவல் தொடர்பு உபகரணங்களை கொள்வனவு செய்வதன் மூலம் நாட்டு மக்கள் பல்வேறு சிரமங்களுக்கும் இடையூறுகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியுள்ளது. அத்தகைய உபகரணங்களை நாட்டு பாவனையாளர்களுக்கு விற்பனை செய்வதை தடுப்பது எமது அமைப்பின் பிரதான பொறுப்பாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.