குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கடவுச்சீட்டு வழங்கும் அலுவலகம் ஒன்றை கிழக்கு மாகாணத்திலும் உருவாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் சபையில் நேற்று (7) கோரிக்கை விடுத்தார்.
கொழும்பு மற்றும் வடக்கு, தெற்கு, மத்திய மாகாணங்களில் கடவுச்சீட்டு அலுவலகம் காணப்படுகின்றது. ஆனால், கிழக்கு மாகாணத்தில் அந்த அலுவலகம் கிடையாது என்பதை சம்பந்தப்பட்ட அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகமொன்று இல்லாமையினால், அங்குள்ள மக்கள் இரண்டு மூன்று தினங்கள் கொழும்புக்கு அலைய வேண்டிய நிலை காணப்படுகின்றது.
எனவே, அதிகளவு சுற்றுலாப்பயணிகள் வருகைத் தரும் கிழக்கு மாகாணத்திற்கும் கடவுச்சீட்டு அலுவலகமொன்றை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் வலியுறுத்தினார்.