இந்தியாவில் சாதாரண நபரின் வங்கிக் கணக்குகளில் திடீரென கோடிக்கணக்கான பணம் வரவு வைக்கப்படும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன.
பீகார் – முசாபர்பூரில் உள்ள ஒரு பாடசாலையில் 9ஆம் வகுப்பு படிக்கும் சையிப் அலி என்ற மாணவன் தனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.500 (இந்திய மதிப்பில்) எடுப்பதற்காக வங்கிக்குச் சென்றுள்ளார்.
அதன்போது அவர் தனது வங்கிக் கணக்கில் பண இருப்பு விபரத்தை சரிபார்த்த போது அதில் (இந்திய மதிப்பில்) ரூ.87.65 கோடி இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர் அவர் மீண்டும் இருப்பு விபரத்தை சரிபார்த்த போது அதே தொகை இருந்தது. அதிர்ச்சியடைந்த மாணவன் தனது குடும்பத்தினரிடம் விபரத்தைக் கூறி உடனடியாக வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்குச் சென்று புகார் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அவரது வங்கிக் கணக்கில் தவறுதலாக பணம் வரவு வைக்கப்பட்ட தொகை திரும்பப் பெறப்பட்டது. இந்நிலையில் குறித்த மாணவரின் வங்கிக் கணக்கில் ரூ.87 கோடி வரவு வைக்கப்பட்டமை தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.