”கல்வி திட்டத்தில் வரலாறு, சித்திரம் போன்ற பாடங்களில் தமிழரின் வரலாறுகள் மற்றும் தமிழர் அடையாளங்கள் திட்டமிட்டே மறைக்கப்படுகின்றன. புதிய கல்வி சீர்த்திருத்தத்தில் இவற்றுக்கு தீர்வுகள் காணப்பட வேண்டும். புதிய கல்வி மறுசீரமைப்பு மாணவர்களுக்கு சுமையானதாக அமைய கூடாது.
இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் பிரதமரிடம் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அமர்வின் போது நிலையியல் கட்டளை 27/ 2இன் கீழ், பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் கேள்வியெழுப்பி உரையாற்றும் போது மேற்கண்டவாறு வினவினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
”புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் கல்வி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சமய பாடத்தில் சைவ சமயம் சீராக முன்னெடுக்கப்படவில்லை. வரலாறு, சித்திரம் போன்ற பாடங்களில் தமிழர் வரலாறு மற்றும் தமிழ் மொழி இலச்சினைகள் அடையாளங்கள் திட்டமிட்டே மறைக்கப்படுகின்றன. இவற்றுக்கான தீர்வுகள் புதிய கல்விச் சீர்திருத்தத்தில் கொண்டு வரப்படுமா?
இலங்கையன் கல்வித்துறையில் கலைத்திட்ட மறுசீரமைப்பு வேலைத்திட்டங்கள் இப்பொழுது கொண்டு வரப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பான சில விளக்கமூட்டும் கூட்டங்களும் தங்கள் தலைமையில் நடைபெற்றுள்ளது. ஆனால் புதிய கலைத்திட்டம் மாணவர்களுக்கு சுமையைக் குறைப்பதாகவும், கல்வியில் புதிய புத்தாக்கத் தேடல்களைக் கொண்டு வருவதற்கான வழிமுறையாகவும் இருக்குமென அவர் கூறியுள்ளார்.
