குவைத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இதில் 21 பேருக்கு நிரந்தரமாகவோ அல்லது பகுதியாகவோ பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
கடந்த 9 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை ஏற்பட்ட இந்த சம்பவத்தில், 63 பேர் மெத்தனால் விஷத்தால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள், இதில் சுமார் 40 இந்தியர்கள் உள்ளனர் என இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
குவைத்தில் மதுபான இறக்குமதி மற்றும் உற்பத்தி 1964 முதல் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், ஒழுங்குமுறையற்ற இடங்களில் தயாரிக்கப்படும் கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலப்பு, இத்தகைய உயிரிழப்புகளுக்கும், பார்வை இழப்பு மற்றும் உறுப்பு செயலிழப்பு போன்ற பாதிப்புகளுக்கும் காரணமாக அமைந்துள்ளது.
குவைத் ஃபர்வானியா மாகாணத்தின் ஜலீப் அல்-ஷுயூக் பகுதியில் இந்த கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டதாக ஆரம்ப விசாரணைகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மேலதிக விசாரணைகள் நடைபெறுவதாகவும் குவைத் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
