உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறும், அவ்வாறு செய்யாவிட்டால் ஒதுக்கப்பட்ட நிதியை கையாள்வதில் தடைகள் ஏற்படுமென மிரட்டல் தொனியில் அமைச்சர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்வதாக பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது…
மன்னாரில் நேற்று நடைபெற்ற உள்ளுராட்சிமன்றத்தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய சுற்றாடல் அமைச்சர், இந்த வருடம் பாதீட்டில் இதுவரை எந்த அரசாங்கங்களும் செய்யாத அளவிற்கு வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காக நிதியொதுக்கியுள்ளோம்.
இந்த நிதியை முறையாக அபிவிருத்தி பணிகளுக்கு பயன்படுத்த வேண்டுமாக இருந்தால் தேசிய மக்கள் சக்திஅனைத்து உள்ளுராட்சி மன்றங்களிலும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் இந்த நிதியை செலவளிப்பதில் தடைகள் ஏற்படலாம். ஆகவே மக்கள் தேசிய மக்கள் சக்தி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இது மிக மோசமான பிரச்சார யுக்தியாகும், ஒரு நாட்டின் அரசாங்கத்தினால் மாகாணங்களின் அபிவிருத்திக்காக நிதியொதுக்கீடு செய்வது ஆட்சியிலுள்ள அரசாங்கத்தின் கடமையாகும். அதனைஅவர்கள் தவிர்க்க முடியாது.
வடக்கு மாகாணம் இலங்கையில் தான் அமைந்துள்ளது. வடக்குமாகாணம் நான் அறிந்த வரையில் தனிநாடல்ல, அப்படிப் பார்த்தால் கடந்த 30 வருடங்களாக நடைபெற்ற கொடிய யுத்தத்தத்தினால் உட்கட்டுமானங்கள் நீண்டகாலமாக அபிவிருத்தி
செய்யப்படாதுள்ளது. அங்குள்ள மக்களின் தேவைகள் நாட்டின் ஏனைய மாகாணங்களில் வாழுகின்ற மக்களின் தேவையைவிட வேறுபட்டது.
ஆகவே வடக்கு மாகாணத்திற்கு விசேடமாக அதிக நிதி ஒதுக்கீடுகளை இந்த அரசாங்கம் செய்திருக்க வேண்டும், ஆனால் அவ்வாறு
நிதியொதுக்கீடு எதுவும் செய்யப்படவில்லை. இந்த நிலையில் உங்களுக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளோம்.
அதனை முறையாக பயன்படுத்த எங்களுக்கு மட்டுமே நீங்கள்
வாக்களிக்க வேண்டும் என்று கூறுவதன் அர்த்தம் நீங்கள் வேறு யாருக்காவது வாக்களித்தால் அந்த நிதியை நாங்கள் விடுவிக்கமாட்டோம் என்றே அர்த்தப்பட வேண்டியுள்ளது.
மத்திய அரசினால் மாகாணங்களின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிதியானது இந்த நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கு சொந்தமானது. அதனை அனுபவிக்க அனைத்து மக்களிற்கும் உரிமையுள்ளது. அதுவே ஜனநாயகம் பாதீட்டு நிதி என்பது தேசிய மக்கள் சக்தியின் கட்சி
நிதியோ சனாதிபதியின் சொந்த நிதியோ அல்ல. இந்த நாட்டு மக்களின் வரிப்பணத்திலிருந்துபெறப்படுகின்ற நிதியாகும்.
எனவே இவ்வாறான மிரட்டும் தொனியிலான பாணியில் தேர்தல் பிரசாரம் செய்வதை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அமைச்சரின்மிரட்டலுக்கு
சரியான பதிலை எதிர்வரும் தேர்தலில் வாக்குப்பலத்தினால் தமிழ்மக்கள் காட்டுவார்கள் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.