இந்தியாவில் உள்ள இலங்கை ஏதிலிகளை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பான உடன்படிக்கையொன்றை ஏற்படுத்துவதற்கு உரிய தரப்புகளிடம் கோரிக்கை முன்வைப்பதாக வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை ஏதிலிகளை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில், அந்த செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் அரச சாரா நிறுவனத்துடன், வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் தங்கியுள்ள ஏதிலிகள் இலங்கைக்குத் திரும்ப வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும் அவ்வாறு நாடு திரும்புவர்களுக்கான உதவிகளும் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய ஏதிலிகள் தொடர்பான விபரங்களையும் பெற்று அவர்களுக்கான தேவைப்பாடுகள் அறிந்து அதனை உடனடியாக பூர்த்திசெய்ய வேண்டும் எனவும் வட மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்
இதேவேளை, தமிழகத்தில் தங்கியுள்ளவர்கள் நாடு திரும்புவதற்கு நிலையான கட்டமைப்பு பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் எனவும் இலங்கை, இந்திய அரசாங்கங்களுக்கு இடையே இதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை மற்றும் இலங்கையில் அரசியல் உறுதிப்பாடு அவசியம் எனவும் குறித்த அரச சாரா நிறுவனத்தினர் குறிப்பிட்டனர்.
இலங்கைக்குத் திரும்புபவர்கள் இங்கிருந்து சென்றவர்களின் இரண்டாம் அல்லது மூன்றாம் தலைமுறையினர் என்பதால், இலங்கையில் அவர்களது பூர்வீக பிரதேசத்தை அடையாளம் காண்பதிலும், காணிகளைக் கண்டறிவதிலும் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்தநிலையில், கொள்கை ரீதியான ஆவணம் ஒன்றைக் குறித்த அரச சாரா நிறுவனம் தயாரித்து வழங்கிய பின்னர் அதனை அடிப்படையாக வைத்து இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக ஆளுநர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நாடு திரும்ப விருப்பமானவர்களின் பட்டியலை, வடக்கின் 5 மாவட்டச் செயலர்களுக்கு வழங்கிய பின்னர் அவர்களுக்கான தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மாவட்டச் செயலர்கள் மேற்கொள்வார்கள் எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திலிருப்பவர்களை வலுக்கட்டாயமாக நாட்டுக்கு அழைத்து வர முடியாது எனக் குறிப்பிட்ட வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், வரவுள்ளவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கத் திட்டமிடுமாறும் அதிகாரிகளை அறிவுறுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.