நாட்டில் நிலவும் கடும் வெப்பமான வானிலை காரணமாக விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபடும் மாணவர்கள் போதுமான அளவு சுத்தமான குடிநீரை பருகுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.
மேலும், விளையாட்டு பயிற்சிகளை நடத்தும் இடங்கள் குறித்து சுகாதார அதிகாரிகளிடம் ஆலோசனை பெறுமாறு இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண அறிவுறுத்தியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் உபுல் ரோஹண மேலும் தெரிவிக்கையில்,
தற்போது நாட்டில் கடும் வெப்பமான வானிலை நிலவுகின்றது. இதனால வெளிவேலைகளில் ஈடுபடும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட வெப்பமான காலநிலை காரணமாகவும் பல பகுதிகளில் மக்கள் பாதிக்கப்பட்டனர். எனவே வெப்பமான வானிலை குறித்து பொதுமக்கள் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும் எனவும், இந்த வெப்பத்திலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.