தலாத்துஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதி உயிரிழந்ததோடு, மேலும் மூவர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கண்டி மஹியங்கனை பிரதான வீதியில் மயிலப்பிட்டி கீழ்பிரிவு பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
கட்டுகஸ்தோட்டையிலிருந்து உடுதெனிய நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றும் மயிலப்பிட்டியிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த பாடசாலை பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் அதில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரில் 18 வயது மதிக்கதக்க மகள் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததோடு, தந்தை மற்றும் மற்றுமொருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி ரிகலகஸ்கட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதோடு, மேற்படி உயிரிழந்த யுவதியின் சடலம் மாரஸ்ஸன வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்தினால் அவ்வீதியில் சில மணி நேரம் போக்குவரத்து தாமதம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் இவ்விபத்துக்கு காரணமாக இருந்த பஸ் சாரதியை தலாத்துஓயா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை தலாத்துஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.