ஈர்ப்பு விசை சார்ந்த ஆய்வுகளை எளிதாக மேற்கொள்ள வசதியாக சிறிய செயற்கை நிலவை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
நம் அண்டை நாடான சீனா, விண்வெளி ஆய்வில் வேகமாக முன்னேறி வருகிறது. மின் செலவை குறைக்க ஏற்கனவே செயற்கை சூரியனை சீனா உருவாக்கியுள்ளது. விண்வெளியில் தனி ஆய்வுக் கூடத்தை அமைக்கிறது.'ரோவர்' வாகனத்தை நிலவில் இறக்கி மண் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் உலகில் முதன் முறையாக செயற்கை நிலவை சீனா உருவாக்கியுள்ளது.
இத்திட்டத்தின் தலைவரும், சீன சுரங்கம் மற்றும் தொழில்நுட்ப பல்கலை விஞ்ஞானியுமான லி ருய்லின் கூறியதாவது:நிலவைப் போலவே செயற்கை நிலவை உருவாக்கியுள்ளோம். நிலவில் ஈர்ப்பு விசை இல்லை என பலர் நினைக்கின்றனர். அது தவறு. புவியீர்ப்பு விசையில் ஆறில் ஒரு பங்கு, நிலவில் உள்ளது. இதற்கு அங்கு நிலவும் காந்த அலைகள் தான் காரணம். இத்தகைய குறைந்த ஈர்ப்பு விசையை விமானம் அல்லது 'டிராப் டவர்' சோதனையில் தற்காலிகமாக உருவாக்க முடியும்.