ஒண்டாரியோவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீது கல் வீச்சு - கட்சி தலைவர்கள் கண்டனம்..!!
கனடாவின் 44ஆவது மக்களவை பொதுத் தேர்தல் வரும் செப்டம்பர் 20ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெற உள்ளது.
கனடாவின் தற்போதைய பிரதமரான லிபரல் கட்சியின் தலைவர் ஜஸ்டின் ட்ரூடோ மூன்றாவது முறையாக இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்.லிபரல் கட்சியின் ஆட்சி காலம் நிறைவடைவதற்கு இரண்டு வருடங்கள் உள்ள நிலையில் பாராளுமன்றத்தை களைத்து தேர்தல் அறிவித்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஏனைய நாடுகளை போன்று கனடிய மக்களும் அரசியல் சார்ந்த கொள்கைகளை அடிப்படையாக கொண்டு தேர்தலில் வாக்களித்தாலும், நாட்டின் முக்கிய பிரச்சனைகளுக்கு தெளிவான தீர்வை முன்வைக்கும் கட்சிக்காக தங்களது முடிவை மாற்றும் போக்கும் மக்களிடையே காணப்படுவதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
கொரோனா நோய்த்தொற்றின் போது நாட்டினை வழி நடத்திய விதம் , உலக பருவநிலை மாற்றம், வாழ்க்கை செலவு அதிகரிப்பு, வருமான வரி, நாட்டின் பொருளாதாரம், வீட்டுவசதி, கல்வி உள்ளிட்ட விடயங்களுக்கு நாட்டு மக்கள் முக்கியத்துவம் அளிப்பது தெரியவந்துள்ளது.
கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கொரோனா தொற்றுநோயைக் கையான்ட விதம் கவனத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது கனேடியர்கள் பொதுவாக அவர் நன்றாக வழிநடத்தியதாக நம்புகிறார்கள் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
அதேவேளை சுமார் ஒரு பில்லியன் டாலர் கடன் மற்றும் மானியங்கள் மூலம் வாடகை வீட்டில் குடியிருக்கும் இளம் கனேடியர்களை வீட்டு உரிமையாளர்கள் ஆக மாற்ற உதவும் புதிய திட்டத்தினையும் அறிவித்துள்ளார்.
இந்த புதிய லிபரல் கட்சியின் திட்டம் வீட்டு வரி இல்லாத சேமிப்பு கணக்கை இளம் கனடியர்களுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் குறைந்த கட்டணத்தை விரைவில் செலுத்த உதவும் என்று கூறப்பட்டுள்ளது.
RRSP மற்றும் TFSA ஆகிய இரண்டின் அம்சங்களையும் இணைத்து, இந்த திட்டம் 40 வயதிற்குட்பட்ட கனேடியர்கள் தங்கள் முதல் வீட்டிற்கு $ 40,000 வரை சேமிக்கவும், அதை திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியமில்லாமல் தங்கள் முதல் வீட்டினை வாங்குதலுக்கு வரி இல்லாமல் திரும்பப் பெறவும் அனுமதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் ஒவ்வொரு தேர்தலின்போதும், கட்சித் தலைவர்கள் நாடு முழுவதும் பிரசாரத்தில் ஈடுபடுவது
வழமையானது இருந்த போதும் கோவிட் -19 காரணமாக தேர்தல் பிரசாரங்கள் மந்தகதியில் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இருந்தபோதும் கட்சி தலைவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் , அதேவேளை அனைத்து கட்சித் தலைவர்களும் ஒன்றாக, நேரலையில் மக்களின், ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்து, தங்களுக்குள்ளே விவாதம் செய்யும் நிகழ்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கட்சி தலைவர்களுக்கு இடையிலான நேரடி பிரஞ்சு மொழி விவாதம் எதிர்வருகின்ற செப்டம்பர் மாதம் 8ம் திகதியும் ஆங்கில மொழி விவாதம் செப்டம்பர் 9ம் திகதியும் இடம்பெறவுள்ளது.
கனடிய அரசின் நிதியுதவியோடு இயங்கும் கனடாவின் மிகப் பெரிய தொலைக்காட்சி மற்றும் மின்னணு ஊடகமான சிபிசி இணையம் மூலம் நடத்திய சமீபத்திய கருத்துக்கணிப்பின்படி, ஜஸ்டினின் லிபரல் கட்சி 140 ஆசனங்களையும் , ஒடூல் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி 133 இடங்களையும், புளக் கியூபெக்வா கட்சி 37 இடங்களையும் மற்றும் ஜக்மித் சிங் தலைமையிலான நியூ டெமாகிரட்டிக் கட்சி 37 இடங்களையும் மற்றும் பசுமை கட்சி 1 இடத்தையும் வெல்லும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நிகழ்தகவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பதற்கு 10 சதவீத வாய்ப்புகளே உள்ளதாகவும், அதே சமயத்தில் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியமைக்க வெறும் 4 சதவீத வாய்ப்புகளே உள்ளதாகவும் அந்த கருத்துக்கணிப்பு மேலும் தெரிவிக்கிறது.
மேலும் இந்த தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ரூடோ அவர்கள் கலந்து கொன்ட பிரசார நடவடிக்கைகளின் போது பல்வேறு இடங்களில் எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக பிரசார நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த திங்கள்கிழமை ஒண்டாரியோ மாகாணத்தின் டொரோண்டோ நகரில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் ட்ரூடோ கலந்து கொண்டார். அப்போது, கொரோனா தடுப்பூசிகள் கட்டாயமாக்கப்பட்டது, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்து சில போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்தினர். அதனை தொடர்ந்து ட்ரூடோ மீது கல்வீச்சு நடத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து லண்டன், ஒண்டாரியோவில் நடந்த நிகழ்ச்சியிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றதாக லிபரல் தலைவர் ஜஸ்டின் ட்ரூடோ செவ்வாய்க்கிழமை மீண்டும் உறுதி செய்தார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஜஸ்டின் ரூடோ ஒவ்வொருவரும் தங்களது கருத்துக்களையோ அல்லது எதிர்ப்பையோ காட்ட முடியும் ஆனால் அந்த செயல்பாடுகள் வன்முறையாக அல்லது அச்சுறுத்தல்களிலோ அல்லது ஆபத்தான செயல்களையோ யாரும் செய்யக்கூடாது. இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது, "என்று அவர் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிட்ட பழமைவாத கட்சியின் தலைவர் ஒடூல் " ட்ரூடோவுடன் நான் பல விஷயங்களில் உடன்படவில்லை, ஆனால் கனடியர்களுடன் தனது கருத்துக்களை சொல்வதற்கும் சுதந்திரமாக பிரசாரங்களை மேற்கொள்ளவும் அனுமதிக்க வேண்டும் இவ்வாறான நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது. இது தொடர்பாக கனடிய ஊடகங்கள் அதைப் பற்றி அறிக்கை செய்ய வேண்டும்," என்று அவர் கூறினார்.